மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) தொடக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சி வியாழக்கிழமை (மார்ச் 15) வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை கூறியதாவது: உலக அறிவியல் தினத்தையொட்டி காமராஜர் பல்கலைக் கழக வளாகத்தில் மிகப்பிரமாண்டமான அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்கலைக் கழக அறிவியல் புலம், கல்லூரிகளின் அறிவியல் துறைகள், அறிவியல் சாதனம் தயாரிக்கும் நிறுவனங்கள், அறிவியல் நூல்களை பதிப்பித்து வெளியிடும் பதிப்பகங்கள் என அனைத்துத் தரப்பு அரங்குகளும் இடம் பெறவுள்ளன. சுமார் 200 அரங்குகளுக்கு மேல் இடம் பெறும் நிலையில், மாணவர்களின் அறிவியல் படைப்புகளின் மாதிரியும் இடம் பெறவுள்ளன.
அறிவியல் கண்காட்சியை தமிழக ஆளுநரும், பல்கலைக் கழகங்களின் வேந்தருமான பன்வாரிலால்புரோஹித் தொடக்கி வைக்கிறார். இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். முதல் நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் அறிவியல் கண்காட்சியை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் அறிவியல் ஆய்வாளர்களும் பங்கேற்று தங்களது கண்டுபிடிப்புகளை மாணவர்களுக்கு விளக்கவுள்ளனர். இக்கண்காட்சி வியாழக்கிழமை (மார்ச் 15) வரை நடைபெறவுள்ளது என்றார்.