திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 30 அடி, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை குளிக்க தடை விதிக்கப்பட்டது. கனமழையால் அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கின.
இந்திய கடல்பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத்தீவுகளை ஒட்டியுள்ள பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது.
மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை புதன்கிழமை காலை வரை நீடித்தது.
காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்):
பாபநாசம் அணை (அதிகபட்சம்) - 190
பாபநாசம் கீழ் அணை -146
சேர்வலாறு அணை - 102
மணிமுத்தாறு அணை- 67.6
கடனாநதி அணை -110
ராமநதி அணை - 130
கருப்பாநதி அணை - 55
குண்டாறு அணை - 98
அடவிநயினார் அணை - 50
நம்பியாறு அணை - 38
கொடுமுடியாறு அணை - 50
கன்னடியன் அணைக்கட்டு - 72.4.
பிற பகுதியில்...
திருநெல்வேலி - 31.3
பாளையங்கோட்டை - 45.2
நான்குனேரி - 60
ராதாபுரம் - 13
சேரன்மகாதேவி - 46
அம்பாசமுத்திரம் - 66.9
தென்காசி - 89.3
செங்கோட்டை - 101
ஆய்க்குடி - 64
சிவகிரி - 9.2
சங்கரன்கோவில் - 25.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 2642.34 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 110 கனஅடி, கடனாநதி அணைக்கு 627 கனஅடி, ராமநதி அணைக்கு 62.50 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 187 கனஅடி, குண்டாறு அணைக்கு 14.5 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 28 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
பாபநாசம் அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 32.00 அடி, சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 30 அடி உயர்ந்து 49.54 அடி, மணிமுத்தாறு அணை நீர்மட்டம்-83.52 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 55.00 அடி, ராமநதி அணை நீர்மட்டம் 10 உயர்ந்து 35.00 அடி, கருப்பாநதி அணை நீர்மட்டம் 13 அடி உயர்ந்து 38.06 அடி, அடவிநயினார் அணை நீர்மட்டம் 15 அடி உயர்ந்து 25.25 அடி, குண்டாறு அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 22.50 அடி, நம்பியாறு அணை நீர்மட்டம் 11.97 அடி, கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 2.00 அடியாகவும் உள்ளது.
பாபநாசம் அணையில் இருந்து 20 கனஅடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 110 கனஅடி, கடனாநதி அணையில் இருந்து 25 கனஅடி, ராமநதி, அடவிநயினார் அணைகளில் தலா 5 கனஅடியும், வடக்குப் பச்சையாறு அணையில் 22.10 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
அணைகளின் நீர்வரத்து வெகுவாக குறைந்து இம்மாவட்டத்திலுள்ள அணைகளில் 8 அணைகள் வறண்டு காணப்பட்ட நிலையில் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த கனமழையால் அணைகளின் நீர் இருப்பு கணிசமாக உயர்ந்திருப்பது குறித்து விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அணைகளில் 655.6 மி.மீ மழை
பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள், பாபநாசம் கீழ் அணை, கடனாநதி, ராமநதி அணைகளில் அதிகபட்சமாக 655.6 மி.மீ மழை பதிவாகின.
அணைப்பகுதியில் பெய்த கனமழையால் பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி , அடவிநயினார் ஆகிய 6 அணைகளின் நீர் இருப்பு உயர்ந்திருப்பதால் குடிநீர் மற்றும் கால்நடைகளின் தேவைக்கு தடையின்றி தண்ணீர் வழங்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
அருவியில் குளிக்கத் தடை
கனமழையால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து மணிமுத்தாறு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு, வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.