சென்னை: குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் அருகே உள்ள குரங்கணி வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடச் சென்ற 36 பேர், ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிக் கொண்டனர். பின்னர் மீட்கப்பட்டவர்களில் 11 பேர் சிகிச்சை பலனன்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
குரங்கணி காட்டுத் தீ சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக தமிழக பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
குரங்கணி காட்டுத் தீ சம்பவத்துக்கான காரணங்கள் குறித்தும், இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யார் என்பது குறித்தும் அவர் விரிவாக ஆய்வு நடத்துவார்.
அத்துடன் இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அவர் தனது அறிக்கையில் பரிந்துரைகளை மேற்கொள்வார்.
அவரது விசாரணையானது இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.