மத்திய இடைநிலைக் கல்வி வாரிய தேர்வில் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நாடு முழுவதும் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஒரு பள்ளியில் 6-ஆம் வகுப்புக்கான ஆண்டுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்துக்கான வினாத்தாளில் ஜாதி குறித்த கேள்வி இடம் பெற்றது கடும் கண்டனத்துக்குரியது. ஜாதி, மதம் மூலம் மாணவர்கள் மத்தியில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்தும் வகையில் கல்வி கற்பித்தல் முறைகள் அமையக் கூடாது.
பழமைவாத கல்வி முறைகள் மாறி தரம் மிகுந்த, புதிய சிந்தனைக்கு வழி வகுக்கும் வகையில், கல்வி முறைகளில் தரம் மேம்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில் ஜாதி குறித்த கேள்வி கேட்கப்பட்டது ஏதோ உள்நோக்கத்துடன் அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இந்த வினாத்தாளை தயாரித்தது யார் என்பதை மத்திய அரசு உடனடியாக கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.