பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் விடுவிப்பு


சென்னை: பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரை விடுதலை செய்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக சன் டிவிக்குப் பயன்படுத்தி அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் சார்பில் தாக்கல் செய்த மனுக்கள் மீது வாதம் முடிவடைந்த நிலையில் சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை, முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டி.வி. ஊழியர் கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டில், இந்த வழக்கில் தில்லி சிபிஐ போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குற்றப் பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் நடந்து வந்தது. மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தில்லியிலிருந்து வந்த மூத்த வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

எனினும், பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது குற்றம்சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com