போக்குவரத்து மேலாண்மை, நீர்வாழ் உயிரின பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலியாவுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் தலைமைச் செயலகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-சாலை பாதுகாப்பு-போக்குவரத்து மேலாண்மை: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா அரசில் சாலை மற்றும் போக்குவரத்தை நிர்வகிக்கும் பொறுப்பை விக்ரோஸ்ட் என்ற அமைப்பு செய்து வருகிறது. இந்த அமைப்புடன் இணைந்து நெடுஞ்சாலை திட்டமிடல், நிர்வகித்தல், சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல், சிறந்த போக்குவரத்து மேலாண்மை அந்த அமைப்புடன் ஒருங்கிணைந்து மாநில அரசு செயல்படும்.
மேலும், இந்த ஒருங்கிணைந்த செயல்பாடு மூலம் நெடுஞ்சாலைப் பணிகளை திட்டமிடல், ஒதுக்கப்பட்ட நிதியை திறம்பட பயன்படுத்துதல், நெடுஞ்சாலை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளுதல், போக்குவரத்து மேலாண்மை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
மீன்வளம்-நீர்வாழ் உயிரினம்: இதேபோன்று, தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாட்டுக்காக ஆஸ்திரேலிய நாட்டின் வர்த்தகம்-முதலீட்டு ஆணையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. முதல்வர் பழனிசாமி முன்னிலையில் பரிமாறப்பட்ட இந்த ஒப்பந்தங்கள் மூலமாக, தமிழகத்தில் மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மேம்பாடு, மீன் உற்பத்தி பெருக்கம், நிலைத்த நீடித்த மீன் வளர்ப்பை உறுதி செய்தல் போன்றவற்றுக்கு வழி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளின்போது, அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.