மதுரையில் கிறிஸ்தவ சபைகள், ஆலயங்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுரையில் சிக்கந்தர்சாவடி செல்லைய்யா நகர் மற்றும் கூடல்புதூர் போன்ற இடங்களில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்கள் மீது இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அங்கிருந்த பைபிள்களை கிழித்து எறிந்து தீ வைத்துள்ளனர். மேலும் மத போதகரையும், அங்கிருந்த பெண்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தும், கூடல்புதூர் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்துள்ளனர். அதுபோல, அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டபோதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் சிறுபான்மை மக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.