சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முன்னரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் மயக்கம் அடைந்ததாக, மருத்துவர் சிவகுமார் விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், மருத்துவர் சிவக்குமார் புதனன்று இரண்டாவது முறையாக ஆஜராகி வாக்குமூலம் அளித்து உள்ளார்.
ஆணையத்தில் ஆஜரான பின்னர் வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
2016 செப்டம்பர் 26 வரை ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பாக ஆணையத்தில் விளக்கம் அளித்தேன்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படும் முன்னரே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் மயக்கம் அடைந்தார்.
பின்னர் முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்னதாகவே அவருக்கு லேசான காய்ச்சல் இருந்தது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னர் சரும பிரச்சனைக்காக அவர் இரண்டு வாரங்கள் ஸ்டீராய்டு எடுத்துக்கொண்டார். ஸ்டீராய்டு எடுத்துக்கொண்ட காரணத்தால் அவருடைய உடல் நலத்தில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை
போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கொண்டு சென்றபோது நன் உடன் இருந்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.