மாமல்லபுரத்தில் பலமுனைக் கட்டண வசூல் செய்யப்படுவது சுற்றுலாப் பயணிகளை பெரிதும் பாதிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன் தவக்கோலம், புலிக்குகை போன்ற இடங்களை சுற்றிப்பார்க்க வெளிநாட்டவர்களிடம் ரூ. 500, இந்தியர்களிடம் ரூ. 30 என கடந்த 1-2-2016 முதல் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 22-12-2017 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழில், வெளிநாட்டினருக்கான கட்டணம் ரூ. 100 கூடுதலாக உயர்த்துவதாகவும், இந்தியர்களுக்கான கட்டணத்தை ரூ.10 கூடுதலாக உயர்த்துவதாகவும் அறிவிப்பு வெளியிட்டு, மக்கள் கருத்தைக் கேட்டுள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தமிழ் மொழியில் வெளியிடவில்லை. ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது.
அது மட்டுமின்றி, மாமல்லபுரத்தின் 3 கி.மீ. சுற்றளவில் நான்கு இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதாவது மத்திய தொல்லியல் துறை நுழைவுக் கட்டணம், மாநில அரசின் சாலைப் போக்குவரத்து வாகன நுழைவுக் கட்டணம், பேரூராட்சி வாகன நுழைவுக் கட்டணம் மற்றும் புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் வாகன நிறுத்தக் கட்டணம் என பல முனைகளில் சுற்றுலாப் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கும். எனவே, பலமுனை கட்டண வசூலை ரத்து செய்வதோடு, கட்டண உயர்வு அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.