ரஜினியின்ஆன்மிக ஆரசியல் தமிழகத்தில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 12-ஆவது ஈரோடு மாவட்ட மாநாடு, சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 3 நாள்கள் நடைபெறும் இம்மாநாட்டின் முதல்நாள் பேரணியை, எஸ்.ஆர்.டி. கார்னரில் இருந்து பவானிசாகர் முன்னாள் எம்எல்ஏ பி.எல்.சுந்தரம் தொடக்கி வைத்தார்.
பேரணியானது முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வடக்குப்பேட்டை மாநாட்டுத் திடலைச் சென்றடைந்தது. இதில் ஆயிரக் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணியை, பவானி ஆற்றுப் பாலம் சந்திப்பில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் பார்வையிட்டார்.
தொடர்ந்து, வடக்குப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தா.பாண்டியன் பேசினார். இதில், மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன், பொருளாளர் எம்.ஆறுமுகம், நிர்வாகக் குழு உறுப்பினர் த.ஸ்டாலின் குணசேகரன், மாவட்டச் செயலாளர் கே.ஆர்.திருநாவுக்கரசு, மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் வி.பி.குணசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சத்தியில் செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் கூறியதாவது:
இமயமலையில் ரஜினி ஆன்மிக அரசியல் நடத்தலாம். தமிழகத்தில் அவரது ஆன்மிக அரசியல் எடுபடாது. அதை அவர் விரைவில் புரிந்து கொள்வார். ஆன்மிகம் தேடி வந்த இடத்தில் அரசியல் பேச மாட்டேன் என அவரே கூறியுள்ளார். அரசியல் பேச வேண்டிய இடத்தில் ஆன்மிகமும் பேச மாட்டார். இரண்டையும் பேசினால் அவர் எந்த இடமும் பெற மாட்டார் என்றார்.