ராஜீவ் கொலை: விடுவிக்கக் கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய பேரறிவாளனின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் கொலை: விடுவிக்கக் கோரிய பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்


புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய பேரறிவாளனின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை குற்றவாளி இல்லை எனக் கூற இயலாது என்று கூறி மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நிலை அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ராஜீவ் கொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் மாற்றம் செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் கருத்துக் கூறியிருந்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அதில், 'வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் (ஓய்வு) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், 19 வயதாக இருந்த பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் ஒரு பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அறிவு என்று அழைக்கப்படும் பேரறிவாளன், 9 வோல்ட்டுகள் கொண்ட இரண்டு பேட்டரிகளை வாங்கிக் கொடுத்தபோது, அவை எதற்குப் பயன்படும் என்று தனக்குத் தெரியாது என்று கூறியிருந்ததை, தான் வாக்குமூலத்தைப் பதிவு செய்யும் போது சேர்க்காமல் விட்டுவிட்டதாகவும், மேலும், பேட்டரிகள் எதற்காக வாங்கப்படுகிறது என்பது பேரறிவாளனுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதையும் தியாகராஜன் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தவறான தகவல்களை அளித்ததன் மூலம் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போதைய ஆதாரங்கள் காட்டுகின்றன. 

பேரறிவாளனுக்கு கடந்த 26 ஆண்டு சிறை வாழ்க்கையில் இரு மாதங்கள் பரோல் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அவரை 2014-ஆம் ஆண்டே விடுவிக்கும் நிலைப்பாட்டை எடுத்தது. இருப்பினும் அவருக்கு எதிரான வழக்கு காரணமாக சிறையில் இருந்து வருகிறார். 

இதுபோன்ற காரணிகளை கணக்கில் கொண்டு பார்த்தால், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு (பிரிவு 21) எதிரானது. எனவே, மனுதாரருக்கு 1998-ஆம் ஆண்டு, மே 11-ஆம் தேதி வழங்கிய தண்டனையை திரும்ப பெற வேண்டும்' என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி அவரது வழக்குரைஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துப் பார்த்தால் அவர் விடுதலைப் புலிகளின் அனுதாபி என்பது தெரிகிறது.

9 வாட் பேட்டரியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாதா? மின்னணு படிப்பில் டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு இது தெரியாதா? வெடிகுண்டு தயாரிப்பில் முக்கியமாக விளங்கியதே அந்த பேட்டரிதான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பேரறிவாளன் தரப்பில், அவர் வாங்கிக் கொடுத்த பேட்டரியைக் கொண்டுதான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது இன்னும் முடிவாகவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com