தமிழகத்தில் கல்விக் கடன்கள் வசூலிப்பு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: இந்தியா முழுவதும் வழங்கப்பட்ட கல்விக் கடனில், 3.66 லட்சம் மாணவர்கள் வாங்கிய ரூ.6,364 கோடி வாராக் கடனாக மாறியுள்ளது. இவற்றில் பாரத ஸ்டேட் வங்கியின் ரூ.915 கோடி, இந்தியன் வங்கியின் ரூ.76.49 கோடி, பேங்க் ஆஃப் இந்தியாவின் ரூ.38.66 கோடி வாராக் கடன்களை வசூலிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ள கடனில் பெரும்பாலானவை தமிழகம், கேரளத்தைச் சேர்ந்தவையாகும்.
வாராக் கடனை வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள் மாணவர்களைத் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டலாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசுகின்றனர். கேரள மாணவர்களின் கல்விக் கடன் வசூலிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டபோது அந்த மாநில அரசு தலையிட்டு, அந்த முடிவை திரும்பப் பெறச் செய்தது. அதேபோல தமிழக அரசும் வங்கி நிர்வாகங்களிடம் பேசி தமிழக மாணவர்களின் கடன்களை தனியார் நிறுவனங்களை வசூலிப்பதை திரும்பப் பெறச் செய்ய வேண்டும்.