சென்னை: காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழன் மாலை 3.30 மணிக்குத் துவங்கியது. இந்த கூட்டத்தில் தீர்மானத்தை முதல்வர் பழனிசாமி முன்மொழிந்து பேசினார். அத்துடன் இந்த தீர்மானத்தை ஒரு மனதாக நிறைவேற்றித் தரும்படியும் அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:
தற்பொழுது நாம் ஒரு கடினமான சூழ்நிலையில் உள்ளோம். ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்ட இது நேரம் இல்லை.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகம் ஒரு பொழுதும் தனது வார்த்தையினை நிறைவேற்றியது இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கோரிக்கையுடன் வந்த தமிழகத்து தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்காமல் புறக்கணித்தது ஜனநாயக நெருக்கடி.
ஆறு வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாதது மிகுந்த கண்டனத்திற்கு உரியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது.
இந்த விவகாரத்தில் முதல்வர் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அத்துடன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.
காவிரி விவகாரத்திற்காக திமுக எம்.எல் ஏக்கள் ராஜிநாமா செய்யவும் தயார்.
இந்த தீர்மானத்திற்கு திமுக முழுமையாக ஆதரவு தருகிறது.
இவ்வாறு ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.