திருப்பதி அருகே செம்மரக் கட்டைகள் கடத்தியதாக தமிழகத் தொழிலாளர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
திருப்பதி அருகே ராகுமாக்குல குண்ட வனப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 பேர் செம்மரக் கட்டைகள் சுமந்து செல்வதைக் கண்டனர்.
இதையடுத்து, அவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் செம்மரக் கட்டைகளை போட்டு விட்டு, அருகிலிருந்த கற்களை எடுத்து தாக்கியபடி வனத்துக்குள் தப்பியோடினர்.
ஆயினும் போலீஸார் விரைந்து செயல்பட்டு, அவர்களில் இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், கொம்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சத்தியவேலு (35), பாபு (37) என்பது தெரிய வந்தது. அவர்களிடம் பெருவிரல் ரேகையை பதிவு செய்து கொண்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர்.