ஆந்திர வனத்தில் செம்மரக்கட்டைகளைக் கடத்துவோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆந்திர வனத் துறை அதிகாரி மல்லிகார்ஜுனா ராவ் தெரிவித்தார்.
திருப்பதி கபில தீர்த்தத்தில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் கூறியதாவது: ஆந்திர வனத்தில் செம்மரக்கட்டைகள் வெட்ட தமிழகத்தில் உள்ள மலைக் கிராமங்களை சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவர்கள் செம்மரம் வெட்ட வருவதைத் தடுக்க ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு விழிப்புணர்வை ஏற்படுத்த சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது.
விரைவில் செம்மரக் கடத்தல்காரர்களின் சொத்து விவரங்களை சேகரித்து அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஆந்திர அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுவரை செம்மரக் கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வரும் 1,500 டன் செம்மரக் கட்டைகளை விற்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல் கூடுதலாக 2,500 டன் செம்மரக் கட்டைகளை விற்க அனுமதி கோரப்பட்டு வருகிறது என்றார் அவர்.