திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தமிழக
சட்டப்பேரவைக்கு நவம்பரில் தேர்தல் வரும் என தெரிவித்தார்.
பேரம்பாக்கத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் துரைமுருகன் பேசியது: காவிரி நதி நீர் பங்கீடு பிரச்னையில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மனு கொடுக்கக் கூட முடியாத நிலையில் தமிழக அரசின் செயல்பாடுகள் உள்ளன. ஆந்திர அரசுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால் மத்திய அமைச்சரவையில் இருந்து தனது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்களை பதவி விலகச் செய்தார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.
ஆனால், இங்கு இருப்பவர்களோ மத்திய அரசிடம் கொத்தடிமைகளாக உள்ளனர்.
வரும் நவம்பர் மாதத்தில் மக்களவைத் தேர்தலுடன், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும் நிச்சயம் வரும்.
தற்போதைய நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட யார் அரசியலுக்கு வந்தாலும், மு.க.ஸ்டாலின்தான் முதல்வராவார் என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் பேசினார். இவ்விழாவில் 1,065 ஏழைகளுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.