பி.எஸ்.என்.எல். முறைகேடு வழக்கு: மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு

முறைகேடாக தொலைபேசி இணைப்பு பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

முறைகேடாக தொலைபேசி இணைப்பு பெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து, தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோரை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை விடுவித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த 2004 முதல் 2006-ஆம் ஆண்டு வரை மத்திய தகவல்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். அப்போது, அந்தப் பதவியைப் பயன்படுத்தி தனது இல்லத்தில் சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு ஏற்படுத்திக் கொண்டதாகப் புகார் எழுந்தது.
இதன்காரணமாக, அரசு கருவூலத்துக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது. 
இதுதொடர்பான வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.நடராஜன் விசாரித்து வந்தார். 
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி புதன்கிழமை (மார்ச் 14) தீர்ப்பு அளிக்கப்படும் என்று கடந்த 9-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
முன்னதாக, தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்று கூறி மாறன் சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கில் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்துவிட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சிபிஐ தெரிவித்தது.
இந்த வழக்கில், பிஎஸ்என்எல் முன்னாள் பொது மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் எம்.பி.வேலுச்சாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலர் கௌதமன், சன் டிவி அதிகாரிகள் சிலர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களும் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com