புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள களமாவூரில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 15 பேர் காயமடைந்தனர்.
கீரனூர் அருகேயுள்ள களமாவூரில் அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அப்பகுதியில் உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. போட்டியை, மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், புதுகை, திருச்சி, தஞ்சை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 860 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 288 வீரர்கள் களமிறங்கி அடக்கமுயன்றனர். அப்போது, காளைகள் முட்டியதில் 15 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். அவர்களில் பலத்த காயமடைந்த 6 பேர் கீரனூர், புதுகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காளைகளை அடக்கிய காளையருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். செல்வராஜ், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இளங்கோ ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.