உலகப் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வைகோ புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: சர் ஐசக் நியூட்டனுக்குப் பிறகு, உலகப் புகழ் பெற்ற இயற்பியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கிங், இங்கிலாந்தில் உள்ளஅவருடைய இல்லத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறேன்.
தனது 21 வயதிலேயே நரம்புத் தாக்குதலால், உடல் இயக்கத்தை இழந்த போதும், மூளையின் கட்டளைகளைப் பதிவு செய்யக்கூடிய கணினியின் உதவியோடு ஆய்வுகளை நிகழ்த்தி அண்டவெளி குறித்துப் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிவித்துக் கொண்டே இருந்தார். அவை அனைத்தும், அதுவரை இயற்பியல் அறிஞர்கள் கருதி வந்த கோட்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்தன.
அவருடைய படைப்புகளைத் தமிழக மாணவர்கள் படித்துப் பயன் பெற வேண்டும். நாம் பார்த்து வியந்த ஒப்பற்ற மேதை ஸ்டீபன் ஹாக்கிங் மறைவுக்கு, மதிமுக சார்பில் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்: ஸ்டீபன் ஹாக்கிங் நம்மிடை வாழ்ந்ததில் பெருமை கொள்வர் உலக மக்கள். அவர் நமக்களித்த ஞான தானத்தை என்றும் நினைவில் கொள்வோம். அவர் புகழ் வாழும் என்று அவர் கூறியுள்ளார்.