டாஸ்மாக் நிறுவனத்தின் ஆயத்தீர்வைகள் மூலமாகக் கிடைக்கும் வருவாய் ரூ.500 கோடி அளவுக்குக் குறையும் என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் மூலமாக ரூ.6,900 கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், நிகழ் நிதியாண்டில் வருவாய் ரூ.6,488 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் அளித்த பேட்டி:
ரூ.17,490 கோடி பற்றாக்குறை: வரவு-செலவுத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சத்து 43 ஆயிரத்து 847 கோடியாகும். அதில், வருவாய் வரவுகள் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரத்து 251 கோடி. வருவாய் செலவுகள் 1 லட்சத்து 93 ஆயிரத்து 742 கோடி. இதனால், வருவாய்ப் பற்றாக்குறை ரூ.17 ஆயிரத்து 490 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டுச் செலவுகள் ரூ.26 ஆயிரத்து 90 கோடி என கணிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.44 ஆயிரத்து 481 கோடியாக இருக்கும். இது மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 2.79 சதவீதமாக இருக்கும். கடன் அளவு மாநில மொத்த உற்பத்தியில் 22.29 சதவீதமாக இருக்கும். இது நிர்ணயிக்கப்பட்ட அளவாகும்.
வீட்டு வசதித் திட்டங்கள்: நகர்ப்புற மேம்பாட்டுக்காக மத்திய அரசின் அம்ருதி, பொலிவுறு நகரங்கள் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், மாநில அரசின் சென்னை பெருநகர மேம்பாட்டுத் திட்டமும், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமும் நிறுத்தப்பட்டிருந்தன. வரும் நிதியாண்டு முதல் அவை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்காக சென்னைக்கு ரூ.500 கோடியும், பிற நகரங்களுக்காக ரூ.750 கோடியும் என ரூ.1,250 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது.
சாதகமான நிலை: பொதுவாக மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் சாதகமான மாற்றம் தென்படுகிறது. 2016-17-ஆம் நிதியாண்டில் 7.42 சதவீதமாக இருந்தது. 2017-18-ஆம் ஆண்டில் அது 8.02 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. வரும் ஆண்டில் மேலும் உயர்ந்து 9 சதவீதத்தைத் தாண்டக் கூடிய வகையில் இருக்கும். இதன் காரணமாக, வரி வருவாயிலும் வளர்ச்சிகள் காணப்படும்.
மதுவிலக்கு ஆயத்தீர்வை தவிர மற்ற இனங்களில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருக்கிறது. இந்த நிலை தொடரும் என கருதுகிறோம். அரசு அலுவலர்களுக்கான ஊதியம், உதய் திட்டத்தால் கூடுதல் நிதிச் சுமைகள் ஏற்பட்டன. வரும் காலத்தில் கிடைக்கும் கூடுதல் நிதி ஆதாரங்கள் வழியாக சரி செய்யப்பட்டு, வருவாய்ப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கும்.
நிதிப் பற்றாக்குறையும், கடன் அளவும் நிர்ணயிக்கத்தக்க அளவில் கட்டுக்குள்ளே இருக்கிறது. வருவாய் வரவுகள் அதிகரிக்கும் பட்சத்தில் பற்றாக்குறை மேலும் குறையும். 14-வது நிதிக் குழுப் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழகத்துக்குக் கிடைத்த வரி வருவாய் பங்கு என்பது மிகக் குறைவாகும். அதேசமயம், மத்திய அரசு அளித்த நிதியானது 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
நிதியை உயர்த்தினாலும் வரிப் பகிர்வில் நமக்கான பங்கினைக் குறைத்ததால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இதற்காக மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். உரிய பங்கினைக் கோரி வருகிறோம். இல்லாவிட்டால் திட்டங்களுக்கு செலவிடப்படும் நிதியையாவது வழங்க வேண்டுமெனக் கூறியுள்ளோம்.
ரூ.44 ஆயிரம் கோடி: வரும் நிதியாண்டிலும் ரூ.44 ஆயிரம் கோடி கடன் வாங்க உத்தேசித்துள்ளோம். கடன் அளவைப் பொருத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் என்பதைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு முன்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் வருவாய் வளர்ச்சி என்பது 6.96 சதவீதமாக இருந்தது.
ஜி.எஸ்.டி.-க்குப் பிறகு (ஜூலை முதல் பிப்ரவரி) 7.04 சதவீதமாக உள்ளது. இந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 15.45 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. அதாவது எதிர்பார்த்ததை விட, 4 முதல் 5 சதவீதம் உயர்வு உள்ளது. அவற்றில் 3 முதல் 4 சதவீதம் என்பது ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் கிடைத்திருக்கும் எனக் கணிக்க வேண்டியுள்ளது. இது ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் மாநிலத்துக்கு கிடைத்த பயனாகும்.
வரி வருவாய் என்பது ரூ.99 ஆயிரத்து 590 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த நிதியாண்டு முடிவடையும் காலத்தில் ரூ.98 ஆயிரத்து 693 கோடி ரூபாயாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. அதாவது எதிர்பார்த்ததைவிட, ரூ.900 கோடி ரூபாய் அளவுக்கு வித்தியாசம் உள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறையில் வருவாய் குறைந்தது ஒரு காரணமாகும்.
அதேசமயம், பத்திரப்பதிவு, முத்திரைத் தாள்கள் காரணமாக வருவாய் அளவு உயர்ந்து வருகிறது. எதிர்பார்த்ததை விட கூடுதலாகக் கிடைத்து வருகிறது. ரூ.1,600 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி.-க்குள் கொண்டு வர எதிர்க்கிறோம். அதுதான் மாநில அரசுக்கான வரி வருவாய் முதுகெலும்பாகும். பெட்ரோலியப் பொருள்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மக்கள் பயன் அடைவார்கள் என்றாலும், வரி வருவாய்களைக் கொண்டே அரசு நிர்வாகத்தை நடத்த வேண்டியுள்ளது.
அம்மா உணவகம் திட்டம்: அம்மா உணவகத் திட்டத்துக்கு அரிசியை இலவசமாகக் கொடுக்கிறோம். பருப்பு போன்ற பொருள்கள் ரேஷன் மானிய விலையிலே கொடுக்கிறோம். அம்மா உணவகங்களை நிர்வகிப்பது உள்ளாட்சி அமைப்புகளாகும். இப்போது இழப்பு ஏற்படுவதாகக் கூறுகிறார்கள். இதனை ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அது ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
சமூகத் திட்டங்களுக்கு ரூ.72,000 கோடி: தமிழகத்தில் இலவசத் திட்டங்கள் எதுவுமே கிடையாது. அரசின் பல சமூகத் திட்டங்களுக்காக ரூ.72 ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவிடப்படுகிறது.
அதில், சத்துணவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டம், வீட்டு வசதி, வேளாண்மை என அனைத்துத் திட்டங்களும் அடங்கும். அவற்றில் சமூகத்துக்கு எந்தத் திட்டம் தேவையில்லை எனக் குறிப்பிட்டால் அரசு அதனைப் பரிசீலிக்கும்.