ஏர்வாடி பள்ளி விழாவில் மின்விளக்குகளால் மாணவர்களுக்கு கண் பாதிப்பு: ஆட்சியர் விசாரணை

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியால் அவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டது.


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியில் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியால் அவ்விழாவில் பங்கேற்ற மாணவர்கள், பெற்றோர் உள்பட 130 பேருக்கு கண் அழுத்தம் ஏற்பட்டது.

திருநெல்வேலியில் அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகள், பெற்றோர்களிடம் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி சனிக்கிழமை விசாரணை நடத்தினார்.

ஏர்வாடியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக நிகழ்ச்சி நடைபெற்ற அறையில் அதிக திறன் கொண்ட அலங்கார மின்விளக்கும் அமைக்கப்பட்டிருந்தன.

விழாவில், பங்கேற்ற பள்ளி குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு இரவில் கண்களில் எரிச்சல் ஏற்பட்டது. நீர் வடியத் தொடங்கியதை அடுத்து கண் சிவந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.

பள்ளியின் தாளாளர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியை (பொறுப்பு) சித்ரா, ஆசிரியர்கள், விழாவில் ஒலி ஒளி அமைத்தவர், போட்டோ வீடியோ எடுத்தவர்களுக்கும் கண்களில் இந்த பாதிப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட அனைவரும் சனிக்கிழமை காலை பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாளாளர் வாகனங்கள் மூலம் 83 குழந்தைகள், மாணவர்கள், பெற்றோர் உள்பட 117 பேரையும் திருநெல்வேலியில் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர். இதுதவிர பாதிக்கப்பட்ட 13 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக கண் பார்வை திறன், கரு விழிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டன. அனைவருக்கும் கண்களில் மருந்து இட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.  மேலும் வலி நிவாரணம், எதிர்ப்பு சக்திக்கான மருத்துவம் அளிக்கப்பட்டன.

குழந்தைகள், பெற்றோர் என 100 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோட்டாட்சியர் இல. மைதிலி, சார் ஆட்சியர் ஆகாஷ், அரசு மருத்துவமனை டீன் எஸ்.எம். கண்ணன், நான்குனேரி வட்டாட்சியர் முருகேஸ்வரி, அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதையொட்டி, மாநகர காவல் உதவி ஆணையர் க. மாரிமுத்து தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆட்சியர் விசாரணை: மருத்துவமனைக்கு வந்த ஆட்சியர் சந்தீப்நந்தூரி, கண் பாதிப்பு ஏற்பட்டவர்களை நேரில் பார்த்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். குழந்தைகள், பெற்றோர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏர்வாடி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் அதிக திறன் கொண்ட மின்விளக்குகள் பயன்படுத்தியதால் குழந்தைகள், பெற்றோர்களுக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டன.

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு கண் பார்வையில் எந்தவித பாதிப்பும் இல்லை. 2 தினங்களில் கண்ணில் ஏற்பட்ட எரிச்சல், பாதிப்பு குணமடைந்து விடுவர் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

ஏர்வாடியில் அரசு மருத்துவக் குழுவினர் 2 தினங்கள் முகாமிட்டு வீடு வீடாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இம்மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாத வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் விழாக்களின்போது எந்த மாதிரியான விளக்குகள் பயன்படுத்துவது என்பது குறித்து விதிகள் வகுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com