சென்னை: தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 298 காவலர்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் 'முதல்வர் காவலர் விருது'களை வழங்கி கௌரவித்தார்.
சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக பணியாற்றிய இரண்டாம் நிலை காவலர், தலைமைக் காவலர் என 298 பேர், முதலமைச்சர் காவலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், 298 காவலர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விருது பெற்ற காவலர்கள், இந்த விருது தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பது பெருமைகொள்ளச் செய்வதாகவும், தங்களை மேலும் ஊக்கத்துடன் பணியாற்ற வைக்கும் என்றும் கூறினர்.