டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு எதிராகவும், உள்ளாட்சி கேளிக்கை வரிக்கு எதிராகவும், தமிழ் திரையுலகம் நடத்திவரும் போராட்டத்தால், தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் திரையரங்குகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இதனால் ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.
டிஜிட்டல் ஒளிபரப்பு, உள்ளாட்சி சேவை வரி விதிப்புக்கு எதிராக, தமிழ் திரை உலகினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக, தமிழக அரசு மற்றும் திரைத் துறைனர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இறுதிமுடிவு எட்டப்படவில்லை. இருப்பினும் தமிழ் திரை அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி வந்தன. ஆனால். தமிழக அரசின் சார்பில், பேச்சுவார்தைக்கு அழைப்பு விடுக்கப்படாததால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், குறிப்பிடும்படியாக, தமிழ்திரைப்படங்கள் வெளியிடப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தமிழக அரசின் உள்ளாட்சி கேளிக்கை வரியை எதிர்த்து, தமிழ் திரையரங்க உரிமையாளர் சங்கம் வெள்ளிக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தது. அதன்படி , தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் திரையரங்குகள் மூடப்பட்டன. ஆனால், சென்னை, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ஏற்கெனவே அறிவித்தப்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் திரையரங்குகள் இயங்கின.
திரையரங்க உரிமையாளர்கள் கூறும்போது, திரையரங்கங்களுக்கு விதிக்கப்பட்ட 8 சதவீத கேளிக்கை வரியை குறைக்க வேண்டும். ஏசி திரையரங்கத்துக்கு பராமரிப்பு கட்டணமாக ரூ.5}ம், ஏ.சி. இல்லாத திரையரங்கிற்கு ரூ.3 உயர்த்திக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த வேலைநிறுத்தம் காரணமாக தினமும் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
என்றனர்.