நெல்லை மாவட்டத்தின் அரசு மையங்களில் 7800 டன் நெல் கொள்முதல்

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 36 இடங்களில் இயங்கி வரும் அரசு மையங்களில் 7800 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழ் பிசான பருவத்தில் 36 இடங்களில் இயங்கி வரும் அரசு மையங்களில் 7800 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நிகழ் பிசான பருவத்தில் தாமிரவருணிப் பாசனத்தில் 1.25 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டது. வடகிழக்குப் பருவத்தில் கூடுதலாக மழை பெய்ததால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் முழு அளவில் விவசாயம் செய்யப் பட்டது.

இப்பருவ நெல் அறுவடை பிப்ரவரி மாதத்தில்  தொடங்கியது. மாவட்டத்தில் 75 சதவீதம் நெல் அறுவடை முடிவடைந்த நிலையில் எஞ்சியுள்ள இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது.

நெல் அறுவடையில் ஒன்றரை மேனி சாகுபடி கிடைத்துள்ள நிலையில் நெல்லுக்கு போதிய விலை இல்லாத நிலையில் விவசாயிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. விவசாயிகள் வசதிக்காக புளியரை, சிவகிரி, சுத்தமல்லி, திருக்குறுங்குடி, வெள்ளங்குளி, கோவில்குளம் உள்பட மாவட்டத்தில் 36 இடங்களில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

சன்னரகம் நெல் ஒரு குவிண்டால் (100 கிலோ) ரூ. 1660 க்கும், மோட்டா ரக நெல் குவிண்டால் ரூ. 1600 க்கும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.  இதுவரை 36 மையங்களிலும் 200 கிலோ மோட்டா ரகம் நெல்லும், 7570 டன் சன்னரகம் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மையங்களில் நெல் வழங்கும் விவசாயிகளுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ஓரிரு நாட்களில் அதற்குரிய தொகை முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது என்றும், சில தினங்களுக்கு முன் இம்மாவட்டத்தில் திடீரென பலத்த பெய்த மழையால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் மார்ச் 31 ஆம் தேதி வரை இயங்கும் என்றும் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com