அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொறுப்பிலிருந்து சின்னசாமியை நீக்கி அதிமுக தலைமையகம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து சின்னசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னை தொழிற்சங்கச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது சட்டவிரோதம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக அதிமுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
ஏற்கெனவே இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சின்னசாமி நிதி முறைகேடு செய்ததால் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பதவியிலிந்து நீக்கப்பட்டதாகவும், சின்னசாமியை நீக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, சின்னசாமி மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.