நடராஜனின் மறைவு அளிர்ச்சி அளிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சசிகலா கணவர் நடராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. ம.நடராஜனின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடராஜனின் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
புதிய பார்வை ஆசிரியர் நடராஜனின் மறைவு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மாணவ பருவத்தில் நடராஜன் தமிழ் மொழிக்காக நடைபெற்ற போராட்டக் களத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியவர். தலைவர் கருணாநிதியின் அன்பை பெற்றவராக, திராவிட இயக்கத்தின் மீது அளவுகடந்த பற்று கொண்டவராக விளங்கியவர்.
அதுமட்டுமல்ல, தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு, அவர் ஆற்றியிருக்கக்கூடிய பணிகளை ஒருக்காலும் நாம் மறந்துவிட முடியாது. தொடக்க காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அமைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, மொழிப் போராட்டத்தில் பங்கேற்ற வரலாற்று நிகழ்ச்சிகளையும் மறந்து விட முடியாது.
ஒரு இலக்கியவாதியாக, தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக விளங்கிய நடராஜனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்றாக அமைந்திருக்கிறது. அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், புதிய பார்வை பத்திரிகையின் ஊழியர்கள் அத்துனை பேருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும், குறிப்பாக தலைவர் கலைஞர் கருணாநிதி சார்பிலும் எனது ஆழ்ந்த இரங்கலை மிகுந்த வருத்தத்தோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.