சசிகலாவின் கணவர் ம.நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நடராஜனுக்கு கடந்த அக்டோபர் மாதம் குளோபல் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர், நவம்பர் மாதம் வீடு திரும்பினார்.
நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் அது தொடர்பான பிரச்னைகளால் மார்ச் 16-ஆம் தேதி நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அவர் சிகிச்சை பெற்று வரும் சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள கிலென்ஈகிள்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் தலைமை இயக்க அதிகாரி சண்முக பிரியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நுரையீரல் நோய்த்தொற்று மற்றும் அது தொடர்பான பிரச்னைகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடராஜனுக்கு செயற்கை சுவாசக் கருவியின் (வென்டிலேட்டர்) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.