பள்ளிக் கட்டடங்கள் விதிமுறைப்படிதான் கட்டப்பட்டுள்ளனவா?: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்கள் தேசிய கட்டட விதிகளுக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்துப்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்கள் தேசிய கட்டட விதிகளுக்குட்பட்டு கட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து மாவட்டக் கல்வி அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக 'மாற்றம் இந்தியா' அமைப்பின் இயக்குநர் பாடம் நாராயணன் தாக்கல் செய்த மனுவில், 'கடந்த 2004 -ஆம் ஆண்டு கும்பகோணம் தனியார் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் பலியாகினர். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பள்ளிகளின் கட்டடத்தை அனைத்து கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும்; 2005 -ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய கட்டட விதிகளை பின்பற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. 
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு பள்ளிகள்கூட பின்பற்றுவதில்லை. உத்தரவுகள் அனைத்தும் வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ளன. தேசிய கட்டுமான விதிகளின்படிதான் பள்ளிகளின் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பதையும், தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அங்கு உள்ளன என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும். இதற்காக மாவட்டம்தோறும் குழுக்கள் அமைக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அரசு அதிகாரிகள் கடைபிடிக்காததால் தனியார் பள்ளிகளும் விதிமீறல்களில் ஈடுபடுகின்றன என மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளும் தேசிய கட்டட விதிகளின்படி கட்டப்பட்டுள்ளனவா, அவற்றில் தீ தடுப்பு உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டங்கள் அளவில், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளின் தலைமையில் குழுக்களை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் ஏப்ரல் 9 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com