புது தில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் போராட நாடாளுமன்றமே சிறந்த இடம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
நாடாளுமன்றத்தில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முடங்கியது.
பிறகு வெளியே நாடாளுமன்ற வளாகத்தில் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, "தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உறுதி அளித்தால்தான் அவையை நடத்த அனுமதிப்போம்.
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது கண்டனத்துக்குரியது. பெரியாருக்கு எதிராக எந்த அவமரியாதையையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
தமிழக மக்களின் உணர்வுகளுக்காக போராடி வருகிறோம். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களின் கவனத்தை ஈர்க்கவே நாடாளுமன்றத்தில் போராட்டம் செய்கிறோம். அதிமுக எம்.பி.க்களின் கோரிக்கை மத்திய அரசுக்குத் தெரியும். எனவேதான் அவையில் போராடி வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட நாடாளுமன்றமே சிறந்த இடம்.
ரத யாத்திரைக்கும், அதிமுக எம்பிக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.