சென்னை: சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையல்ல என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டது.
அந்த ஆணையத்தில் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஜெயலலிதா இல்ல ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். இறுதியாக பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறைச்சாலையில் உள்ள சசிகலா தனது வழக்கறிஞர் மூலமாக பிரமாணப் பத்திரத்தினை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பிரபல ஆங்கில செய்தித்தாள் ஒன்றில் விசாரணை ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் உள்ள தகவல்கள் என்று பல்வேறு விஷயங்கள் வெளியாகின. அவற்றில் ஜெயலலிதாவை மருத்துவமனையில் நேரில் பார்த்தது யார், அவருக்கு இருந்த உடல்நலக் குறைபாடு மற்றும் சிகிச்சை தொடர்பான பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.
தற்பொழுது சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மையல்ல என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆணையம் தரப்பிலிருந்து ஊடகங்களுக்கு விரிவான விளக்க அறிக்கைஅனுப்பப்பட்டுள்ளது.