துறை உத்தரவை மதிக்காததால் நடவடிக்கை: காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி விளக்கம்! 

துறை உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதால்தான் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இரு   காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.
துறை உத்தரவை மதிக்காததால் நடவடிக்கை: காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி விளக்கம்! 

தேனி: துறை உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதால்தான் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இரு   காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருபவர்கள் ரகு மற்றும் கணேஷ் என்னும் காவலர்கள். இவர்கள் இருவரும் புதன்கிழமையன்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுக்க வந்திருந்தனர்.

புகார் கொடுத்து விட்டு வெளியே வந்த இருவரும் அலுவலக வாசலில் தாங்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த டிஜிபி அலுவலக் காவல் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் மயிலாப்பூர் போக்குவரத்து  காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களைப் பாதுகாப்பாக மயிலாப்பூர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருவதும், சமீபத்தில் அவர்கள் இருவரும் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்தது. தங்கள் மேல் தவறு இல்லாத போதும், பழி வாங்கும் நோக்கத்துடனும், ஜாதி ரீதியான கண்ணோட்டத்துடன் மேலதிகாரிகள் நடந்து கொள்வதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் துறை உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதால்தான் இரு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இரு   காவலர்கள் தீக்குளிப்பு முயற்சி பற்றி தேனி எஸ்.பி பாஸ்கரன் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சிறைக் கைதிகளிடம் கஞ்சா சிக்கியது தொடர்பாக சிறைக்கண்காணிப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ரகு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. காவலர் கணேஷ் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்கு முறையாகச் செல்லாமல் சீருடையுடன் ரேக்ளா ரேஸில் ஈடுபட்டுள்ளார். சில விஷயங்களில் காவல்துறையிருக்கு எதிராக அவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அத்துடன் இதுபோல் பல்வேறு ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதன் காரணமாகவும், துறை உத்தரவை மதிக்காமல் இருந்த காரணத்தாலும், குறிப்பிட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார்.

அதன் அடிப்படையில், அவர்கள் ராமநாதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இதனை அடுத்து, அவர்கள் என்னிடம் வந்து எங்களை நீங்கள் பணியிட மாற்றம் செய்ய கூடாது என கூறினர்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரகு, கணேஷ் உள்பட நான்கு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களில் மற்ற ஜாதியினரும் இருக்கும் நிலையில், அவர்களை ஜாதி ரீதியாக பிரிப்பதாக கூறப்படும் புகார் பொய்யானது.

காவல்துறையில் அனைத்து மதத்தினரும், ஜாதியினரும் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட ஜாதியினர் மீது மட்டும் நடவடிக்கை என கூறுவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com