தமிழகத்தில் மதவெறுப்பை வைத்து அரசியல் செய்ய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றவர்கள் நினைக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
காட்பாடியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் மதவெறுப்பை வைத்து அரசியல் செய்ய ஸ்டாலின் போன்றவர்கள் நினைக்கின்றனர். ரதத்தை தடுப்பது இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும். இந்த விவகாரத்தை வைத்து போராட்டம் நடத்துவது மிக தவறான ஒன்று.
இந்த ரதத்தை நல்லிணக்க விரோத தேர் என்று திருமாவளவன் கூறுகிறார். எந்த வகையில் இது நல்லிணக்கத்துக்கு விரோதமானது என அவர்தான் கூற வேண்டும். மேலும், அவர் தான் நல்லிணக்கத்துக்கு விரோதமாக உள்ளார்.
மதத்தை வைத்து பிரித்தாளும், அரசியல் செய்ய வேண்டாம் என ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பல பிரிவினை முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் வாக்குகளைப் பெற நினைக்கிறார். பிரிவினைவாதமோ, பிரிவினை கருத்தையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சந்திரபாபு நாயுடு சுயநலத்துக்காக பாஜக கூட்டணியை விட்டு வெளியே சென்றுள்ளார்.
கொடுக்கப்பட்ட நிதியை அவர் முறையாகப் பயன்படுத்தாமல் ஊழல் செய்துள்ளார். இதை மறைப்பதற்கே அவர் கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவரது விலகல் பாஜகவை பலப்படுத்துவதாகவே அமையும். அதை பலமாகவே பார்க்கிறோம்.