மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அங்கு துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டதாக அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அமைப்பின் நிறுவனர் டிடிவி தினகரன் கூறுகையில்,
அப்பல்லோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டது தொடர்பாக அந்த மருத்துவமனை நிர்வாகம் தான் விளக்கமளிக்க வேண்டும். இதில் நாங்கள் யாருக்கும் அஞ்சத்தேவையில்லை. ஏனெனில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது, துரதிருஷ்டவசமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழக்கம் செய்யப்பட்டது. அவருக்கு சிகிச்சை தருவதில் அப்பல்லோ மருத்துவமனை சிறப்பு கவனம் செலுத்தியது.
ஜெயலலிதாவை யார் யார் சந்திக்க வேண்டும் என்பதை உடன் இருந்தவர்கள் முடிவு செய்தார். சிகிச்சையின் போது உறவினர்கள் சிலருக்கு அனுமதி வழங்கப்பட்டது. மரணம் தொடர்பாக விசாரணை நடப்பதால் அதுபற்றி தற்போது எதையும் கூற முடியாது. சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் விசாரணை ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்தார்.