சென்னை டிஜிபி அலுவலகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள் ஜாதி ரீதியாக ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் செயல்பட்டு தொடர்ந்து பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதாகவும், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுமுறை கேட்டால் கூட மது வாங்கி தர சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறை கூறினர்.
பின்னர் தங்களது கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி அவர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இதை அப்பகுதியில் நின்ற காவலர்கள் கவனித்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டது.
இது தொடர்பாக டிஜிபி அலுவலக அதிகாரிகள் தரப்பில் கூறியது: பணியில் இவர்கள் இருவரும் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர்கள் தெரிவித்த பிற குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ் மற்றும் ரகு ஆகியோர் மெரினா காவல் நிலைய போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.