சென்னை: வங்கிகளின் ரூ.824 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நகைக்கடை அதிபர் வீடு மற்றும் சொத்துக்களை ஏலம் விடப் போவதாகக் கூறி கதவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள பூபேஷ் குமாரின் வீட்டில், இன்று நோட்டீஸை ஒட்டியுள்ளது எஸ்பிஐ வங்கி.
வங்கிகளில் ரூ.824 கோடி அளவுக்குக் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்ததாக கனிஷ்க் நகைக் கடை நிறுவனம் மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக எஸ்பிஐ உள்ளிட்ட 14 வங்கிகள் இணைந்த கூட்டமைப்பு அளித்த புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், கடன் பெற அடமானம் வைக்கப்பட்ட சொத்துக்களை ஏலத்தில் விட்டு, அதன் மூலம் கடன் தொகையை மீட்க வங்கிகள் தரப்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்தே, சென்னையில் உள்ள கனிஷ்க் நகைக்கடை நிறுவன அதிபர் பூபேஷ் குமார் வீட்டில் இன்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
பூபேஷ் குமாரின் வீடு மற்றும் சொத்துக்களை ஏலம் விடுவது தொடர்பாக ஒரு வாரத்துக்குள் நாளிதழில் விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.