தாரமங்கலம் அருகே ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜோதிடரை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள கே.ஆர்.தோப்பூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பன்னீர்செல்வம் (42). இவர் அதே பகுதியில் ஜோதிடம் பார்த்து வந்தார். தன்னிடம் ஜோதிடம் பார்க்க வரும் பெண்களை இவர் பாலியல் வன்கொடுமை செய்துவருவதாகப் புகார் எழுந்தது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏழு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தாரமங்கலம் போலீஸாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, தாரமங்கலம் போலீஸார் கடந்த ஒரு மாதமாக பன்னீர்செல்வத்தை கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் ஒரு இளம்பெண் திருமணம் செய்துகொள்வதற்காக தோஷம் கழிப்பதற்கு தனது பெற்றோருடன் ஜோதிடர் பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். அப்போது பெற்றோரை வெளியே அனுப்பிவிட்டு இளம்பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முயன்றபோது போலீஸார் உள்ளே சென்று, ஆடையின்றி இருந்த ஜோதிடர் பன்னீர்செல்வத்தை கைது செய்துள்ளனர்.
மேலும், மயக்கத்தில் இருந்த இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் பெண்களுக்கு மட்டுமே சிறப்பு ஜோதிடம் பார்த்து வந்ததாகவும், குழந்தையின்மை, திருமணத்தடை, கணவன்-மனைவி பிரச்னை, கல்வி மேம்பாடு செய்தல் எனக் கூறி பெண்களைத் தனி அறையில் வைத்து மயக்கி பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்துள்ளது. இவர் மீது மாதர் சங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாக வழக்குப் பதிவு செய்து பன்னீர்செல்வத்தை தாரமங்கலம் போலீஸார் கைது செய்து ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அங்குள்ள கிளைச் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து ஜோதிடர் பன்னீர்செல்வத்தை சிறைக்கு கொண்டு செல்லும்போது வாகனத்தை மறித்து பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவருக்கு கடும் தண்டனை வழங்கக் கோரியும், பிணையில் விடுவிக்கக்கூடாது என்றும் முழக்கமிட்டனர். இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஜோதிடர் பன்னீர்செல்வம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.