சென்னை: மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரையில் தேவாலயம் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து, தேவாலயம் தாக்கப்பட்டது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன.
இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்து பேசினார். அப்போது, மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவாலயம் தாக்கப்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவாலயம் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று முதல்வர் கூறினார்.