வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளை கூறி வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கின் விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தமிழ்வேந்தன் தாக்கல் செய்த மனுவில், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். பெரியார் சிலை குறித்த அவரின் சர்ச்சைக்குரிய கருத்தால் தமிழகத்தின் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்தக் கருத்து அவர் சார்ந்துள்ள கட்சியின் கருத்தாக இருந்தாலும், இதனால் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எச்.ராஜாவை கைது செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் அம்பத்தூர் காவல்நிலைய ஆய்வாளரிடமும் கடந்த மார்ச் 7 ஆம் தேதி புகார் அளித்தேன். ஆனால், இந்த புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் மார்ச் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.