குரங்கணி காட்டுத் தீ விபத்து: மலைப் பாதையில் நடந்து சென்று விசாரணை அதிகாரி ஆய்வு

குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளை 22 கி.மீ. நடந்தே சென்று விசாரணை அலுவலர் அதுல்ய மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
குரங்கணி காட்டுத் தீ விபத்து: மலைப் பாதையில் நடந்து சென்று விசாரணை அதிகாரி ஆய்வு

குரங்கணி மலையில் காட்டுத் தீ விபத்து நிகழ்ந்த பகுதிகளை 22 கி.மீ. நடந்தே சென்று விசாரணை அலுவலர் அதுல்ய மிஸ்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
 தேனி மாவட்டம், போடி குரங்கணி தெற்கு பிரிவு வனப் பகுதியில் ஒத்தை மரம் என்ற இடத்தில் கடந்த மார்ச் 11-ம் தேதி பரவிய காட்டுத் தீயில் சிக்கி, சென்னை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளிலிருந்து மலையேற்றப் பயிற்சிக்காக இரண்டு குழுக்களாக வந்திருந்த 36 பேரில் 9 பேர் சம்பவ இடத்திலும், 9 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இவர்களில் 10 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மேலும், 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிப்பதற்காக, தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த் துறை முதன்மைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். புதன்கிழமை தேனி வந்த இவர், இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், விபத்து நடந்த சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக, குரங்கணிக்கு வியாழக்கிழமை காலை 6.50 மணிக்கு வந்தார். அங்கிருந்து நடந்தே கொழுக்குமலை செல்லும் மலைப் பாதையில் 7.1 கி.மீ. தொலைவிலுள்ள ஒத்தை மரம் என்ற இடத்தை அடைந்தார்.
 அங்கு, தீப்பிடித்த இடங்கள், மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட குழுவினர் உணவருந்திய பகுதி, 10 பேர் மட்டும் பாதுகாப்பாக தப்பிய பகுதி, மீதமுள்ள 26 பேர் தீயில் சிக்கிய பகுதி, 9 பேர் மலைச் சரிவிலிருந்து விழுந்து இறந்த பகுதி, மலையேற்றப் பயிற்சிக் குழுவினர் நடந்து வந்த பாதை, கொழுக்குமலை செல்லும் பாதை ஆகியவற்றை ஆய்வு செய்தார். அங்கிருந்து மீண்டும் 7 கி.மீ. மலைப் பாதையில் நடந்தே கொழுக்குமலை சென்றடைந்தார். அங்கு, அவர் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்ட குழுவினர் தங்கிய இடங்கள், தேயிலை தோட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வு செய்வதற்கு உதவியாக, சடலங்கள் இருந்த இடங்கள், தீ விபத்து நடந்த இடங்களில் அடையாளத்துக்காக கொடிகள் நடப்பட்டிருந்தன.
 இந்த ஆய்வின்போது, மலையேற்றப் பயிற்சி குழுக்கள் தீ விபத்தில் சிக்கியபோது, அவர்களை மீட்ட குரங்கணி, கொழுக்குமலை கிராம மக்கள், மலையேற்றப் பயிற்சி மருத்துவர் என்.ஆர்.டி. ராஜ்குமார், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஜெகதீசன், 10 பேரைக் காப்பாற்றி அழைத்து வந்த வழிகாட்டி ரஞ்சித் ஆகியோரிடம் சம்பவம் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார்.
 பின்னர் டாப் ஸ்டேசன் வரை வாகனத்தில் சென்ற அதுல்ய மிஸ்ரா அங்கிருந்து வழக்கமாக மலையேற்ற பயிற்சி நடைபெறும் பகுதி வழியாக 8 கி.மீ. தொலைவு நடந்தே சென்று மீண்டும் குரங்கணிக்கு திரும்பினார்.
 முன்னதாக, ஒத்தை மரம் என்ற இடத்தில் அதுல்ய மிஸ்ரா செய்தியாளர்களிடையே கூறியதாவது: விபத்து நடந்த இடங்களைப் பார்வையிட்டதன் மூலம் தீ பரவிய இடங்கள், மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்த விதம், தீ எங்கிருந்து பரவியது என்பன உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொண்டேன். மேலும், வெள்ளிக்கிழமை முதல் விபத்து குறித்து விசாரணை நடத்த உள்ளேன். அதன்பின்னர், இது குறித்த முழுமையான அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
 விசாரணை அலுவலருடன், தலைமை வனப் பாதுகாப்பு அலுவலர் உதயன், மதுரை மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் ராகேஷ்குமார், தேனி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், மேகமலை வனச் சரணாலய அலுவலர் ராம்மோகன், மாவட்ட வன அலுவலர் கந்தசாமி, போடி டி.எஸ்.பி. பிரபாகரன், இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com