சென்னை: சென்னையைச் சேர்ந்த மற்றொரு தனியார் நகைக் கடையான நாதெள்ளா சம்பத் நகைக் கடை ரூ.250 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்திருப்பதாக சிபிஐயிடம் எஸ்பிஐ வங்கி புகார் அளித்துள்ளது.
2010ம் ஆண்டு முதல் நாதெள்ளா சம்பத் நகைக் கடை, தனது நிதிநிலையை போலியாகக் கணக்குக் காட்டி, சில சொத்துக்களை அடிப்படையாக வைத்து கடன் பெற்று ஏமாற்றியிருப்பதாக எஸ்பிஐ கூறியுள்ளது.
நாதெள்ளா சம்பத் நகைக் கடைக்கு ரூ.250 கோடி அளவுக்குக் கடன் அளித்திருக்கும் எஸ்பிஐ, இந்த நகைக் கடை மீது கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது.
நாதெள்ளா சம்பத் ஜுவல்லரி, என்எஸ்சி ஜுவல்லர்ஸ் மற்றும் நாதெள்ளா சம்பத்து செட்டி ஆகியவை கூட்டு நிறுவனங்களாகும்.
முன்னதாக, 2017ம் ஆண்டு நாதெள்ளா சம்பத்து செட்டி நகைக் கடை, பொதுமக்களிடம் இருந்து தங்க நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடுகளைப் பெற்று, அதனை திருப்பித் தராமல் மோசடி செய்தது. அக்டோபர் மாதத்தில் சென்னையில் இருந்த நகைக் கடைகள் மூடப்பட்டன.
சுமார் 1000 பொதுமக்கள் இது தொடர்பாக புகார் அளித்தனர். 21 ஆயிரம் பேரிடம் இருந்து நகைச் சீட்டு நடத்தி ரூ.75 கோடி பணம் வசூலித்ததாக நாதெள்ளா சம்பத்து செட்டி நகைக் கடை மீது குற்றம்சாட்டப்பட்டு, நகைக் கடை உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இப்படி ஏமாற்றும் அனைத்து நிறுவனங்கள், நகைக் கடைகள், தொழிலதிபர்கள் என ஒருவரையும் விடாமல் எஸ்பிஐ வங்கி கடன் கொடுத்து ஏமாந்திருப்பது மக்களிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.