சென்னையில் காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக, யோகா வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 10 ஆயிரம் காவலர்கள் பங்கேற்றனர்.
சென்னை பெருநகர காவல்துறையில் உள்ள காவலர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், பணியில் ஏற்படும் நெருக்கடியின் காரணமாக மன உளைச்சல் ஏற்படாமல் இருப்பதற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் யோகா வகுப்பு சனிக்கிழமை நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற்ற யோகா வகுப்பை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விசுவநாதன் தொடங்கி வைத்தார். இந்த யோகா வகுப்பில் காவலர்கள், காவல்துறை அதிகாரிகள் என 2,500 பேர் பங்கேற்றனர்.
தொடக்க நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன்,இணை ஆணையர்கள் டி.எஸ்.அன்பு, ஏ.ஜி.பாபு,துணை ஆணையர்கள் ஏ.ஜெயலட்சுமி, எஸ்.விமலா, கே.சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல ராயபுரம் புனித பீட்டர் பள்ளி மைதானம், திரு.வி.க.நகர் மாநகராட்சி மைதானம், அண்ணா நகர் கந்தசாமி நாயுடு கல்லூரி மைதானம், மயிலாப்பூர் காமதேனு கல்யாண மண்டபம், வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானம், அடையாறு புனித மைக்கேல் பள்ளி மைதானம், பரங்கிமலை ஆயுதப்படை மைதானம், கோடம்பாக்கம் மீனாட்சிக் கல்லூரி மைதானம் உள்ளிட்ட 14 இடங்களில் யோகா வகுப்புகள் நடைபெற்றன.
இந்த வகுப்பில் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, தியானம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் சுமார் 10 ஆயிரம் காவலர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை செய்திருந்தது.