இளையராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பு புகார்!

கிறிஸ்துவர்களின் மனதினைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக, இசையமைப்பாளர் இளையராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது.
இளையராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பு புகார்!

சென்னை: கிறிஸ்துவர்களின் மனதினைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக, இசையமைப்பாளர் இளையராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது.

அமெரிக்காவின் சிலிக்கான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கூகுள் நிறுவனத்தின் தலைமையகத்துக்குச் சமீபத்தில் வருகை தந்த இளையராஜா, அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது

உலகில் தோன்றிய ஞானிகளில் ரமண மகரிஷியைப் போல ஒருவர் கிடையாது. இயேசு உயிர்த்தெழுந்து வந்தார்கள் என்று சொல்வார்கள். அடிக்கடி ஆவணப் படங்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். அதில் இயேசு உயிர்த்தெழுந்து வந்தார் என்பது நிரூபணமாகவில்லை என்று சொல்லப்படுகிறது. உண்மையான உயிர்த்தெழுதல் நடந்தது ஒருவருக்குத்தான். 16 வயதில் ரமண மகரிஷிக்கு மட்டும் தான் உயிர்த்தெழுதல் நடந்துள்ளது என்றார். இளையராஜாவின் இந்தப் பேச்சு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இளையராஜாவின் இந்தப் பேச்சு கிறிஸ்தவர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தி கிறிஸ்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக சிறுபான்மை மக்கள் நலக் கட்சி அறிவித்தது. மேலும் தன் பேச்சுக்கு இளையராஜா மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தியது. 

இந்நிலையில் ஞாயிறன்று சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவை வீட்டை முற்றுகையிட சிறுபான்மை மக்கள் நலக் கட்சியைச் சேர்ந்த 35 பேர் முயன்றார்கள். இதற்கு அனுமதியளிக்க மறுத்த காவல்துறை அவர்களைக் கைது செய்தது. அவர்களைத் திருமண மண்டபத்தில் தங்கவைத்து பிறகு விடுதலை செய்தார்கள். இதையடுத்து இளையராஜாவின் வீட்டுக்குக் காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிறிஸ்துவர்களின் மனதினைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக, இசையமைப்பாளர் இளையராஜா மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கிறிஸ்துவ அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளது.

கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் என்னும் அமைப்பின் பொதுச்செயலாளர் தயாநிதி என்பவர் இந்தப் புகாரினை அளித்துள்ளார். அவர் தனது புகாரில் இயேசு உயிர்த்தெழுதல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை இளையராஜா கூறியதாக சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிந்தேன்.

இவ்வாறு கிறிஸ்துவர்களின் மனதினைப் புண்படுத்தும் வகையில் பேசிய இளையராஜா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com