மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி மற்றும் 4 நாள் தொடர் விடுமுறை காரணமாக உதகையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
சமவெளிப் பகுதிகளில் நிலவும் கடும் வெப்பம் காரணமாகவும், உதகையில் நிலவும் இதமான காலநிலை காரணமாகவும், கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்ட'பெட்டா மலைச் சிகரம், படகு இல்லம் மற்றும் கர்நாடக பூங்கா உள்ளிட்ட பகுதிகளிலும், வனப்பகுதிகளை ஒட்டி உள்ள சுற்றுலாத் தலங்களிலும் பயணிகளின் கூட்டம் அதிமாக இருந்தது.
உதகையில் வெள்ளிக்கிழமை அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் சுமார் 15,000 பேரும், ரோஜா பூங்காவுக்கு சுமார் 5,000 பேரும் வருகை தந்துள்ளனர். வியாழக்கிழமை தாவரவியல் பூங்காவுக்கு 12,250 பேரும், ரோஜா பூங்காவுக்கு 3, 500 பேரும் வந்திருந்தனர்.
வியாழக்கிழமையைவிட வெள்ளிக்கிழமை கூட்டம் அதிகரித்துள்ளதால் அடுத்து வரும் இரு தினங்களிலும் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உதகை -மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை வரை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.