கோவை மாவட்டம், சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் தில்லியைச் சேர்ந்த ஜெயின் என்பவருக்குச் சொந்தமான சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட தனியார் ஆலையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பாக்குப் பொருள்கள் உற்பத்தி செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இங்கு போதைப் பாக்கு தயாரிக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 20 டன் மூலப்பொருள்களும், விற்பனைக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 79 மூட்டை குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு, கண்ணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் லோகநாயகி முன்னிலையில் அந்தக் கிடங்கு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என தடைச் சட்டம் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சூலூர் போலீசார் வழக்கு பதிவுசெய்துள்ளனர். இந்த ஆலையின் உரிமையாளர் அமித் ஜெயினை கைது செய்ய தமிழக போலீஸார் தில்லி சென்றனர்.
இந்நிலைியல், குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யார் மனு தாக்கல் செய்தாலும் தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக செவ்வாய்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.