நீலகிரி மாவட்டத்தில் கோடைவிழா களைகட்டத் துவங்கியுள்ள நிலையில், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூக்கள் மலர்ந்து சுற்றுலாப் பயணிகளை வரவேற்கத் தயாராகி வருகின்றன.
மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் மே மாதம் வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர தோட்டக் கலைத் துறை, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுவது வழக்கம்.
இதை முன்னிட்டு, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நாற்று நடவு உள்ளிட்ட பல்வேறு பணிகள் துரித கதியில் நடைபெற்று வந்தன. தற்போது இங்கு நடவு செய்யப்பட்டுள்ள மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பெட்டூனியா, சால்வியா, டேலியா உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்கள் தற்போது பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன. இவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
உதகை மலர்க் கண்காட்சி காண வரும் சுற்றுலாப் பயணிகளில் பலர், குன்னூரில் உள்ள சுற்றுலாத் தலங்களைக் காண வருவார்கள் என்பதால், அதற்கான பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தோட்டக் கலைத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.