உதகை மலர்க்காட்சி நடைபெறும் தேதிகள் நீட்டிக்கப்பட்டுள்ளன.
உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் உதகை மலர்க்காட்சி 122வது ஆண்டாக நடப்பாண்டில் மே மாதம் 18-ஆம்தேதி முதல் 20-ஆம்தேதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது மலர்க் காட்சி தேதி நீட்டிக்கப்பட்டு 20-ஆம்தேதி நிறைவடைவதற்குப் பதிலாக 22-ஆம்தேதி வரை நடைபெறும் என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உதகை மலர்க் காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 18-ஆம்தேதி காலை தொடங்கி வைக்கிறார். மே 22-ஆம் தேதி நிறைவு விழாவில் தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்கிறார். கடந்த 122 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உதகை மலர்க் காட்சியில் இதுவரையிலும் 3 நாட்களுக்கு மேல் மலர்க் காட்சி நீட்டிக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ஆளுநர் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே மலர்க் காட்சியின் நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.