சென்னை: காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க திமுக தரப்பில் அனைத்துக்கட்சி கூட்டம் செவ்வாயன்று நடைபெறும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. செவ்வாய் காலை உச்ச நீதிமன்றத்தில் காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்து மே 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் திட்டமிட்டபடி மாலை நடைபெற்றது.
அப்பொழுது காவிரி விவகாரத்தில் மத்திய மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துவதாக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டம் நிறைவு பெற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
அனைத்துக்கட்சி கூட்டத்தில் நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச் சென்ற பெற்றோர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறை கைது செய்ததை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி வழக்கில் மே 14-ம் தேதி நல்ல முடிவு வரவில்லை என்றால், மீண்டும் மே 15-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். அதன்பிறகு என்ன வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன.
கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் கோரிக்கை குறித்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.