தமிழர்கள் எதிர்கொண்டுள்ள அரசியல் ரீதியிலான பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அதில் பங்கேற்று அதிபர் சிறீசேனா பேசியதாவது:
உள்நாட்டுப் போரில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.
30 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டுப் போரை ராணுவம் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதில், 1 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய தீர்வு கிடைக்கப் பெறவில்லை.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு அளிக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவம் பயன்படுத்திய நிலங்களில் 85 சதவீதம், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றார் சிறீசேனா.
சிறீசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி (எஸ்எல்எஃப்பி), இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணி, எதிர்க்கட்சியான முன்னாள் அதிபர் ராஜபட்சவின் புதிய கட்சியிடம் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.
இந்தச் சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டத்தின் 70-ஆவது பிரிவைப் பயன்படுத்தி நாடாளுமன்ற கூட்டத்தொடர் அலுவல்களை அதிபர் சிறீசேனா தற்காலிகமாக ஒத்திவைத்தார்.