கோடை விடுமுறையையொட்டி குழந்தைகளுடன் இயற்கையை ரசிக்க மே மாதம் முழுவதும் 'வண்ணப் பூரணி வனச் சுற்றுலா' திறந்துவிடப்படும் என சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர்அருண்லால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் புதன்கிழமை கூறியதாவது:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வாரத்தில் சனி, ஞாயிறு மட்டுமே திறக்கப்பட்ட 'வண்ணப் பூரணி வனச் சுற்றுலா', இந்த மாதம் முழுவதும் அனைத்து நாள்களிலும் திறக்கப்படும். காலை 7 மணிக்கு முதல் பயணமாகவும் மாலை 2.30 மணிக்கு பிற்பகல் பயணமாகவும் துவங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கு பாரம்பரிய தின்பண்டங்கள் வழங்கப்படும். வனப் பகுதியில் 20 கி.மீ. வேகத்தில் வனத்தைக் கண்டு ரசிக்கலாம். திம்பம் முதல் கோட்டாடை, சுல்தான் சாலை வரையிலும், காராட்சிக்கொரையில் இருந்து தெங்குமரஹாடா வரையிலும், ஆசனூரில் இருந்து ஹூலிகரேப்பட்ட வரையிலும், கேர்மாளத்தில் இருந்து சூட்டிங் லாட்ஜ் வரையிலும், சிக்ஹள்ளியில் இருந்து ஜூரஹள்ளி வரையிலும் என 6 பகுதிகளில் வனச் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளுக்குச் செல்ல விரும்புவோர் 97506-59436 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், str-tn.org என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.