தற்போது பெய்து வரும் மழையால் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், கோடை விடுமுறை என்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இங்கு புதன்கிழமை அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து மகிழ்ந்தனர்.
காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் சுருளி அருவிக்கு வரத் தொடங்கினர். அவர்கள் வந்த கார் மற்றும் வேன்கள் அருவியின் நுழைவு பகுதியிலிருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டன. வனத்துறையினர் பாலிதீன் பைகள் மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகளை சுற்றுலாப் பயணிகள் கொண்டு செல்வதை தடுக்க சோதனை நடத்தினர். சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் இயற்கையை ரசித்துக் கொண்டே அருவிப் பகுதிக்கு சென்றனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மேகமலை வன உயிரின சரணாலய ஊழியர்கள் வரிசையாக நிற்க வைத்து குளிக்க அனுமதித்தனர்.